பவர் பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா? அதற்கான விதிமுறைகள், அதிகாரங்கள் என்னென்ன? இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பவர் பத்திரம் (Power of Attorney) என்பது, ஒரு சொத்தின் உரிமையாளர் தன்னால் நேரில் செய்ய முடியாத சொத்து தொடர்பான செயல்களை செய்யும் வகையில், மற்றொருவருக்கு (முகவர்) எழுத்துப்பூர்வமாக அதிகாரம் அளிக்கும் சட்ட ஆவணம் ஆகும். இது, முகவருக்கு விரிவான அதிகாரங்களை வழங்குகிறது. அதாவது, சொத்தை விற்பதற்கு, நிலத்தை மனைப்பிரிவுகளாக மாற்றுவதற்கு, அரசு அலுவலகங்களில் சொத்து சம்பந்தமான ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு போன்ற அதிகாரங்களை முழுமையாக வழங்குகிறது.
ஒரு நிலம் அல்லது வீடு உரிமையாளரால் நேரடியாக பராமரிக்க முடியாதபோது, அல்லது அவரால் நேரில் செயல்பட முடியாத சூழ்நிலையில், ஒருவர் மற்றொருவருக்கு அதிகாரம் வழங்கும் அவசியம் ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலைகளில் பவர் பத்திரம் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
அதிகாரங்கள்: பொது அதிகார பத்திரம் (General Power Of Attorney) தனி அதிகார பத்திரம் (Limited Power Of Attorney) என்று இதில் 2 வகைகள் உள்ளன.. பொது அதிகார பத்திரம் என்பது அதன் முகவராக உள்ளவருக்கு சம்பந்தப்பட்ட சொத்தை விற்கவும், நிலத்தை மனைப்பிரிவுகளாக ஆக்கவும், அரசு அலுவலகங்களில் சொத்து சம்பந்தமான ஆவணங்களில் கையொப்பம் இடவும் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கும்
ஆனால், தனி அதிகார பத்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்கு மட்டும் அதிகாரம் தரப்பட்டிருக்கும். அதாவது, சொத்தை விற்பது அல்லது நிலத்தை மனைப்பிரிவுகளாக பிரிப்பது போன்ற குறிப்பிட்ட செயலை தவிர வேறு எதையும் அவர் மேற்கொள்ள இயலாது. அதேபோல, பவர் பத்திரத்தில், ஏதேனும் காலத்தை குறிப்பிடாமல் இருந்தால், அந்த பவர் பத்திரத்தை முதன்மையாளர் ரத்து செய்யும் வரை செல்லுபடியாகும்.. ஆனால், முதன்மையாளர் இறந்துவிட்டால் பவர் பத்திரம் தானாகவே காலாவதியாகிவிடும்..
கிரையம்: நீங்கள் அதிகாரம் கொடுக்கும் முகவர், உங்கள் நிலத்தை வேறு யாருக்காவது கிரையம் செய்திருந்தாலோ அல்லது கிரையம் செய்வதற்கான வேலையில் இறங்கியிருந்தாலோ, அந்த பவர் பத்திரத்தை முதன்மையானவர் எளிதாக ரத்து செய்துவிடலாம்.
சொத்தின் உரிமையாளர் அல்லது பவர் ஆப் அட்டர்னி மூலம் மட்டுமே அதிகார பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் அதற்கான நகல் வேண்டி விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் பவர் ரத்து செய்யப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை நம்மால் அறிந்து கொள்ளமுடியும்.