கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெப்பத்தின் பிடியில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. கோடையில் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து குழந்தை நல ஊட்டச்சத்து நிபுணர் மருத்துவர் லேகா ஸ்ரீதரன் வழங்கும் ஆலோசனைகளை இங்கே காண்போம்.
வெயில் காலத்தில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுவது உடலின் நீர்ச்சத்தைப் பராமரிப்பதாகும். இது குறித்துப் பேசும் மருத்துவர் லேகா, “குழந்தைகள் வீட்டில் ஏசி (AC) அறையில் இருக்கும்போது தாகம் எடுப்பது குறைவாகவே இருக்கும். இதனால் அவர்கள் தண்ணீர் குடிக்க மறக்கக்கூடும். எனவே, தாகம் எடுக்கிறதோ இல்லையோ, குழந்தைகள் போதிய அளவு தண்ணீர் குடிப்பதைப் பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்” என்கிறார். வெறும் தண்ணீரைத் தவிர்த்து இளநீர், மோர், லெஸ்ஸி, எலுமிச்சை சாறு மற்றும் காய்கறி சூப் போன்ற திரவ உணவுகளையும் வழங்கலாம். மேலும் தர்பூசணி, ஆரஞ்சு, அன்னாசி, வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
கோடையிலும் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருக்கப் புரதச்சத்து (Protein) இன்றியமையாதது. முட்டை, மீன், நட்ஸ் மற்றும் யோகட் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகள் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் என்பது ஒரு பொதுவான மூடநம்பிக்கை என்று கூறும் மருத்துவர், தேவையான அளவு சிக்கன் மற்றும் மட்டன் போன்றவற்றை தாராளமாக வழங்கலாம் என்கிறார். குழந்தைகளின் எடையை பொறுத்து அவர்கள் பருக வேண்டிய நீரின் அளவு மாறுபடும்.
உதாரணமாக, 10 கிலோ எடை கொண்ட ஒரு குழந்தை ஒரு நாளைக்கு 1000 மி.லி தண்ணீரும், 15 கிலோ எடை கொண்ட குழந்தை 1500 மி.லி தண்ணீரும் குடிப்பது அவசியம். குழந்தைகள் சரியாகச் சிறுநீர் கழிக்கிறார்களா என்பதைக் கவனிப்பதன் மூலம் அவர்களின் உடலில் நீர்ச்சத்து போதிய அளவில் இருப்பதை உறுதி செய்யலாம்.
தவிர்க்க வேண்டியவை :
வெயில் காலங்களில் அதிக எண்ணெயில் பொரித்த உணவுகளை குழந்தைகளுக்கு தருவதைத் தவிர்க்க வேண்டும். உணவில் அதிக எண்ணெய் சேர்த்துச் சமைப்பதும் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கும். அதேபோல், குளிர்சாதனப் பெட்டியில் அதிக அளவில் ஐஸ்கிரீம்களைப் பதப்படுத்தி வைப்பதைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் ஐஸ்கிரீம் அதிகமாக இருக்கும்போது குழந்தைகள் அதை அடிக்கடி உண்ண விரும்புவார்கள். இது உடல்நலத்தைப் பாதிக்கக்கூடும். எப்போதாவது ஒருமுறை தருவதில் தவறில்லை என்றாலும், அதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ளக்கூடாது என மருத்துவர் எச்சரிக்கிறார்.



