நாட்டில் தகுதியற்ற வாகனங்களின் இயக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. சிலர் லாபத்திற்காக பழைய வாகனங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அவை எப்போது வேண்டுமானாலும் ஆபத்தை ஏற்படுத்தலாம். ஆம், பழைய வாகனங்கள் எப்போது பிரேக் ஃபெயிலியர் ஆகும் என்பதே நமக்கு தெரியாது. குறிப்பாக, அவற்றால் எப்போது வேண்டுமானாலும் விபத்துகள் நிகழலாம். இம்மாதிரியான சூழலே பழைய வாகனங்களைச் சுற்றி நிலவுகின்றது. இதுமட்டுமின்றி, சுற்றுச் சூழலுக்கும் அவை மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன. காற்று மாசடைவதில் முக்கிய பங்களிப்பை பெட்ரோல், டீசல் வாகனங்கள் கொண்டிருக்கின்றன. அதிலும், பழைய வாகனங்களின் பங்களிப்பு இதில் மிகப் பெரியதாக உள்ளது. பழைய வாகனங்களில் இருந்து வெளிவரும் அதிகப்படியான கார்பனினாலேயே காற்று மிக மோசமாக மாசடைகின்றது. எனவேதான் அரசு பழைய வாகனங்களின் இயக்கத்திற்கு எதிராக போர் கொடியைத் தூக்க தொடங்கியிருக்கின்றது.

இதன் ஒருபகுதியாக, மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,15 ஆண்டுகளுக்கு மேலான தனிநபர் வாகனம், அல்லது 15 ஆண்டுகளுக்கும் மேல் பயன்பாட்டில் இருக்கும் வர்த்தக வாகனங்களை அழிக்கும்படி மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புதிய சட்டமானது 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு மாநில அரசுகளின் போக்குவரத்து கழகங்கள் மற்றும் போக்குவரத்து துறைகளின் பஸ்கள் மற்றும் இதர வாகனங்களுக்கும் பொருந்தும்.