தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார். அதன்படி, விருதுநகர் மாவட்டம் 97.85% தேர்ச்சி விகிதம் பெற்று முதலிடத்தில் உள்ளது. திருப்பூர் 97.79 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், பெரம்பலூர் 97.59 சதவீதத்துடன் 3ஆம் இடத்திலும் உள்ளது. அதிகபட்சமாக கணக்குப்பதிவியல் பாடத்தில் 6,573 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு இயற்பியல், வேதியியல் பாடங்களில் கடந்தாண்டை ஒப்பிடுகையில் நூற்றுக்கு நூறு சதவீதம் மதிப்பெண் பெற்றவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இயற்பியலில் 812 பேரும் வேதியலில் 3,909 பேரும், உயிரியல் பாடத்தில் 1,494 பேரும், கணிதத்தில் 690 பேரும், தாவரவியலில் 340 பேரும், விலங்கியலில் 154 பெரும், கணினி அறிவியல் பாடத்தில் 4,618 பேரும், வணிகவியல் பாடத்தில் 5,678 பேரும், பொருளியல் பாடத்தில் 1,760 பேரும், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 4,051 பேரும், வணிக கணிதம் மற்றும் புள்ளியில் பாடத்தில் 1,334 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கணக்கு பதிவியல் ஆகிய பாடங்களில் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளார். நந்தினியின் தந்தை சரவணகுமார் தச்சுத் தொழிலாளியாக உள்ளார். நந்தினியின் அம்மா பாலபிரியா. நந்தினியின் சகோதரர் பிரவீன் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார்.