இஸ்ரேல் – சிரியா இடையே போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க தூதர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து மத்திய தரைக்கடலில் அண்டை நாடுகளுடன் போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் அடுத்து சிரியா மீது தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளாக காசாவில் ஹமாஸுடன் போர், ஹெஸ்புல்லாவை தாக்குவதாக லெபனான் மீது போர், ஈரானோடு யுத்தம் என்று அடுத்தடுத்து இஸ்ரேலின் போர் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. சமீபத்தில் இஸ்ரேல் – ஈரான் இடையே போர் ஏற்பட்ட நிலையில் ஈரான் ஏவுகணைகளை மழையாக பொழிந்து இஸ்ரேலை தாக்கியது. இந்த போரில் அமெரிக்கா தலையிட்டு இரு நாடுகளிடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த புதன் கிழமை மீண்டும் சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. சிரியாவில் ஏற்கனவே அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை நிலவி வரும் நிலையில் சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள பாதுகாப்பு அமைச்சக தலைமையகம் மீது குண்டுவீச்சு தாக்குதலை நடத்தியது இஸ்ரேல். இதில் 18 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ட்ரூஸ் பகுதியில் பல நாட்களாக நடந்த தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கு ஏற்கனவே அரசியல் ரீதியான மோதல்கள் இருந்துதான் வருகிறது. இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்காத சிரியா, அதன் குடிமக்களையும், பாஸ்போர்ட்டையும் சிரியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாகவே வைத்துள்ளது. இது ஒருபுறம் இருக்க சிரியாவில் மைனாரிட்டியாக உள்ள ட்ரூஸ் இனக்குழுவிற்கும், சிரிய பாதுகாப்புப்படைக்கும் இடையே கடந்த சில வாரங்களாக தெற்கு சிரியாவில் மோதல் வலுத்து வருகிறது. இதில் ட்ரூஸ் மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் பேசி வருகிறது.
சிரியாவில் ஆளும் பஷர் அல் அசாத் குடும்பத்திற்கு எதிரான கொள்கை கொண்ட ட்ரூஸ் மக்கள் தனி மாகாண கோரிக்கையோடு, தங்கள் நிலத்தில் ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட ஜிகாதி கும்பலின் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாகதான் தற்போது இந்த தாக்குதலை நடத்தியது இஸ்ரேல்.
இந்தநிலையில் இருநாடுகளுக்கிடையேயான போர் முடிவுக்கு வந்துள்ளது. இருநாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக துருக்கிக்கான அமெரிக்க தூதர் டாம் பராக், தனது எக்ஸ் பதிவில் கூறினார். துருக்கி, ஜோர்டான் மற்றும் அண்டை நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேலும் சிரியாவும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக பராக் கூறினார்.
அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகமும் கனடாவில் உள்ள சிரிய தூதரகமும் இந்த கருத்துகளுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை. சிரியாவின் ஸ்வீடா மாகாணம், பெடோயின் போராளிகளுக்கும் ட்ரூஸ் பிரிவுகளுக்கும் இடையிலான மோதல்களால் கிட்டத்தட்ட ஒரு வாரமாக வன்முறை நடந்தது. வெள்ளிக்கிழமை முன்னதாக, தெற்கு சிரியாவின் ஸ்வீடா பகுதிக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு சிரியப் படைகள் மட்டுப்படுத்தப்பட்ட அணுகலை அனுமதிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெற்று வரும் இந்த சண்டையில் 321 பேர் இறந்ததாக சிரிய மனித உரிமைகள் வலையமைப்பு தெரிவித்துள்ளது, அவர்களில் மருத்துவ பணியாளர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர். அனைத்து தரப்பினரும் களத்தில் தூக்கிலிடப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. காயமடைந்த 500க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் சிரிய அமைச்சர் தெரிவித்தார்.
Readmore: பிரபல நடிகர் ஃபிஷ் வெங்கட் உடல்நலக்குறைவால் காலமானார்…!