இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் அனைவரிடமுமே செல்போன் மற்றும் கணினி பயன்பாடு அதிகரித்துள்ளது. குழந்தைகள் முதல் இளம் தொழில் வல்லுநர்கள் வரை அனைவரும் மணிக்கணக்கில் செல்போனில் தான் நேரத்தை செலவிடுகின்றனர். அதிலும் குறிப்பாக, கொரோனா காலத்திற்கு பிறகு பள்ளி மாணவர்கள், குழந்தைகள் மத்தியிலும் செல்போன் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது.
மூளையில் கட்டியை ஏற்படுத்தும் செல்போன்..?
நீண்ட நேர மொபைல் பயன்பாடு மூளைக்கட்டி அபாயத்தை அதிகரிக்குமா..? என்ற கேள்விக்கான பதிலை கண்டறிய ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனம் உள்பட மருத்துவ அமைப்புகள் இணைந்து இந்த ஆராய்ச்சியை நடத்தியுள்ளனர். அதில், மொபைல் அல்லது மடிக்கணினி அதிகம் பயன்படுத்துவதால் மூளையில் கட்டியை ஏற்படும் என்பதை நிரூபிக்கும் விதமாக எந்தவொரு அறிவியல் ஆதாரமும் இதுவரை இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், டிஜிட்டல் சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவது மூளையின் செயல்திறனை பாதிக்கும் என்றும் உடல் ஆரோக்கியத்திற்கும் பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளனர்.
இதுதொடர்பாக, புனேவில் உள்ள DPU சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சாரங் கோடேச்சா கூறுகையில், ”செல்போன் மற்றும் மடிக்கணினிகள் அயனியாக்கம் செய்யாத கதிர்வீச்சை வெளியிடுகின்றன. இதற்கு கட்டிகளை உருவாக்க போதுமான சக்தி அதனிடம் இல்லை. ஆனால் இதற்கு நேர்மாறாக, புற்றுநோயை உண்டாக்கும் அயனியாக்கம் செய்யும் கதிர்வீச்சு DNA என்னும் மரபணுக்களை சேதப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
அதாவது, டிஜிட்டல் திரைகளை அதிகமாகப் பயன்படுத்துவது மறைமுகமாக மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதிக நேரம் திரையை பார்ப்பதால் தலைவலி, தூக்கமின்மை, கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகளும் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த பிரச்சனைகள் இன்றைய காலத்து இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் அதிகமாக உள்ளது.
எனவே, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் பிறகு கண்கள் மற்றும் மூளைக்கு ஓய்வு கொடுங்கள். இரவில் தூங்குவதற்கு முன் டிஜிட்டல் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 1-2 மணிநேரம் வெளியில் விளையாடுவதை ஊக்குவியுங்கள்.