டெல்லி ரெட்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக ரக்பி பிரீமியர் லீக் பட்டத்தை வென்று சென்னை புல்ஸ் அணி வரலாறு படைத்துள்ளது.
ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் பாணியில், இந்திய மண்ணில் இந்த ஆண்டு முதல் ரக்பி பிரீமியர் லீக் தொடர் (ஆர்.பி.எல்) தொடங்கப்பட்டது. கடந்த ஜூன் 15ம் தேதி முதல் மும்பையின் அந்தேரி விளையாட்டு வளாகத்தில் ரக்பி பிரீமியர் லீக் தொடர் (ஆர்.பி.எல்) நடைபெற்று வந்த இந்த தொடரில், டெல்லி ரெட்ஸ், ஐதராபாத் ஹீரோஸ், கலிங்கா பிளாக் டைகர்ஸ், சென்னை புல்ஸ், மும்பை ட்ரீமர்ஸ், பெங்களூரு பிரேவ்ஹார்ட்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றன.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடரின் இறுதிப்போட்டி நேற்று மும்பையில் உள்ள ஷாஹாஜி ராஜே போசலே விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில், சென்னை புல்ஸ் – டெல்லி ரெட்ஸ் அணிகள் மோதின. தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய சென்னை அணி, இறுதிப்போட்டியிலும் சிறப்பான தொடக்கதுடன் அபாரமாக விளையாடியது. போட்டியின் ஆரம்பத்திலேயே வாஃபௌஸ் மாலிகோ மற்றும் பிலிப் சவுதுராகா ஆகியோர் சிறப்பாக விளையாடினர். மேலும், ஜோசேவா தலகோலோ, ரெட்ஸ் அணியின் நிலையை மோசமாக்கினார், இதன் மூலம் சென்னை புல்ஸ் அணிக்கு மேலும் ஐந்து புள்ளிகளைச் சேர்த்தார். அதன்படி, இடைவேளையின் போது, சென்னை புல்ஸ் அணி டெல்லி ரெட்ஸ் அணியை 24-0 என முன்னிலை வகித்தது.
இடைவேளையின் பின்னர், புல்ஸ் அணி மேலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. ஆட்டம் முடிவதற்கு நான்கு நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், புல்ஸ் அணி 31-0 என முன்னிலை பெற்றது. இருப்பினும் இறுதியில் டெல்லி ரெட்ஸ் அணியை 41-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சென்னை புல்ஸ் அணி வெற்றிபெற்றது. மேலும், இந்த சீசனில் இதுவே மிகப்பெரிய வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் முதன்முறையாக ரக்பி பிரீமியர் லீக் பட்டத்தை வென்று சென்னை புல்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.
ஹைதராபாத் ஹீரோஸ் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த போதிலும், ஹைதராபாத் ஹீரோஸ் அணி, 17-12 என்ற கணக்கில் பெங்களூரு பிரேவ்ஹார்ட்ஸை தோற்கடித்ததன் மூலம் இந்த தொடரில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
Readmore: வரலாற்றில் இன்று!. உலகின் முதல் அவசர தொலைபேசி எண் “999” அறிமுகப்படுத்தப்பட்ட நாள்!. பின்னணி என்ன?