தமிழ்நாட்டில் புற்றுநோய் பாதிப்பு அபாயகரமான வேகத்தில் அதிகரித்து வருவது சுகாதாரத் துறையின் சமீபத்திய ஆய்வில் அம்பலமாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, மாநிலத்தின் புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை முதல்முறையாக ஒரு லட்சத்தை தாண்டியிருப்பது பொதுமக்களிடையேயும், மருத்துவ வல்லுநர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,022 ஆக மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது 2025-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து 1,00,097 எனப் பதிவாகியுள்ளது. துரித உணவுப் பழக்கம், மாறிவரும் வாழ்வியல் முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களே இந்த அதிரடி உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
மாவட்ட வாரியான பாதிப்புகள் :
புற்றுநோய் பாதிப்பில் தலைநகர் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் 8,505 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் 7,295 பேரும், வேலூரில் 6,525 பேரும் இந்தப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நகர்ப்புறங்களில் நிலவும் அதீத மாசு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் இத்தகைய மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கக் காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
பாலினம் சார்ந்த பாதிப்புகள் :
ஆய்வின் மற்றொரு முக்கியத் தகவலாக, ஆண்களை விடப் பெண்களே அதிக அளவில் புற்றுநோய் அச்சுறுத்தலுக்கு உள்ளாவது தெரியவந்துள்ளது. குறிப்பாகப் பெண்கள் மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை வாய்ப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆண்களைப் பொறுத்தவரை, புகையிலை பயன்பாடு மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் வாய் புற்றுநோய் மற்றும் வயிற்றுப் புற்றுநோய் பாதிப்புகள் முதன்மையாக உள்ளன. ஆரம்பக்காலத்திலேயே பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே இந்த உயிர்க்கொல்லி நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
Read More : தவெகவில் வெடித்த புதிய போர்..!! கட்சியில் இருந்து வெளியேறும் ஜான் ஆரோக்கியசாமி..? அதிர்ச்சியில் விஜய்..!!



