ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரி மகேந்திரன், கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை வடபழனியில் வாடகை வீட்டில் தங்கி அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவி பதுமேகலா அவருடன் உடன் இருந்து கவனித்து வருகிறார்.
இந்நிலையில், அவர்களின் 6 வயது மகள் சஞ்சனா ஸ்ரீ, ஈரோட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவர் சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்துள்ளார். இந்நிலையில், சஞ்சனா ஸ்ரீயின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது தாய் பதுமேகலா அவரை மெரினா கடற்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு, பொரித்த மீன் மற்றும் சிக்கன் பிரைடு ரைஸ் ஆகியவற்றை அவருக்கு வாங்கி கொடுத்துள்ளார். பின்னர், இருவரும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது, சஞ்சனா ஸ்ரீக்கு திடீரென காய்ச்சல் இருந்ததால், அவரது தாய் மருந்து கொடுத்து தூங்க வைத்துள்ளார். ஆனால் மறுநாள் காலை, மகளை எழுப்பியபோது, அவர் எந்த அசைவும் இன்றி இருந்துள்ளார். வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வடபழனி போலீசார், சிறுமியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே, சிறுமியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



