தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே அன்றைய தினம் தண்ணீர் திறக்கப்படும். அந்த வகையில் உரிய தேதியில் 19 முறையும், கால தாமதமாக 61 முறையும், முன்கூட்டியே 11 முறையும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
2011 முதல் 2019 வரை தொடர்ச்சியாக 8 ஆண்டுகள், கால தாமதமாகவே மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் உரிய தேதியிலும், 2022-ம் ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது. 2023-ம் ஆண்டு உரிய தேதியில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு போதிய நீர் இருப்பு இல்லாததால் கால தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 114 அடியாக இருந்ததால் உரிய தேதியில் தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கான நீரை முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து 92வது ஆண்டாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலைக்குள் இது 12,000 கன அடியாக உயரும். மேட்டூர் அணையின் தண்ணீர் திறப்பின் மூலம் காவிரி படுகையின் விவசாயிகள் பயன்பெறுவர். திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் இந்த தண்ணீர் மூலம் 20 மாவட்டங்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும்.