டெல்லி AI Impact Summit Expo என்ற பெயரில் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டில் 100-க்கு மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள், நிறுவனர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்..
இந்த நிலையில் இந்த AI மாநாட்டில் சீனாவில் தயாரிக்கப்பட்ட Unitree ரோபோ நாயை தாங்களே உருவாக்கியதாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் காட்டியதாக சர்ச்சை எழுந்தது.. இதையடுத்து கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தை AI Impact Summit Expo நிகழ்ச்சி இடத்தை காலி செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது..
பல்கலைக்கழகத்தின் மறுப்பு
இதற்கு பதிலளித்த கேல்கோட்டியாஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நேஹா சிங் “அதிகாரிகளிடமிருந்து இதுபோன்ற எந்த உத்தரவையும் நாங்கள் பெறவில்லை. கேல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் ஒரு பொறுப்புள்ள கல்வி நிறுவனம்,” என்று தெரிவித்தார்.
ஆனால், உச்சி மாநாட்டிலிருந்து வெளியான காட்சிகளில், கேல்கோட்டியாஸ் பல்கலைக்கழகத்தின் ஸ்டாலுக்கு வழங்கப்பட்ட மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில், கேல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம், தங்களுக்கு எதிராக நடத்தப்படும் “பிரச்சார தாக்குதலால்” (propaganda campaign) தங்கள் ஆசிரியர்களும் மாணவர்களும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாக தெரிவித்தது.
AI நிரலாக்கத்தை மாணவர்கள் கற்றுக்கொள்ளவும், உண்மையான உலகப் பயன்பாட்டுக்கான திறன்களை வளர்த்துக் கொள்ளவும், ரோபோ நிரலாக்கம் (robotic programming) ஒரு முக்கிய முயற்சியாக மேற்கொள்ளப்படுவதாக பல்கலைக்கழகம் கூறியது. இன்றைய சூழலில் AI திறமை உருவாக்குவது அவசியம் என்றும் அதில் குறிப்பிட்டது.
பல்கலைக்கழகம் தனது அறிக்கையில் “எங்கள் நோக்கம் முழுமையாக மாணவர் கற்றலும் புதுமையும் தான். மாணவர்கள் நடைமுறை அனுபவம் பெறவும், எதிர்காலத்துக்குத் தயாராகவும், நவீன தொழில்நுட்பங்களை அணுகும் வாய்ப்பை நாங்கள் வழங்குகிறோம். எதிர்மறை கருத்துகளைப் பரப்புவது, புதுமை செய்யவும், கற்றுக்கொள்ளவும், உலகளாவிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி திறன்களை வளர்த்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் மனஉறுதியை பாதிக்கும்.” என்று தெரிவித்துள்ளது.
கேல்கோட்டியாஸ் ரோபோ நாய் சர்ச்சை
சமூக வலைதளங்களில் வைரலான ஒரு வீடியோவில், பேராசிரியர் நேஹா சிங், அந்த ரோபோ நாயை அறிமுகப்படுத்தும்போது, “நீங்கள் ‘Orion’ என்பதை சந்திக்க வேண்டும். இது கேல்கோட்டியாஸ் பல்கலைக்கழகத்தின் மூலம் உருவாக்கப்பட்டது,” என்று கூறியிருந்தார்.
அந்த இயந்திரம் கண்காணிப்பு (surveillance) மற்றும் பார்வையிடல் (monitoring) பணிகளை செய்யக்கூடியது என்றும், வளாகம் முழுவதும் சுதந்திரமாக நகரும் என்றும் அவர் விளக்கியிருந்தார்.
சீன நிறுவனம் தயாரிப்பு என குற்றச்சாட்டு
இந்த வீடியோ வெளியானதும், பலரும் அந்த ரோபோ நாய் உண்மையில் சீனாவைச் சேர்ந்த Unitree Robotics நிறுவனம் தயாரித்த ஒன்றே என்று கூறினர். இணையத்தில் எழுந்த கடும் எதிர்ப்புக்குப் பிறகு, கேல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் சமூக வலைதளங்களில் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டது. அதில், “இந்த ரோபோ நாயை நாங்கள் உருவாக்கியதாகவும், தயாரித்ததாகவும் எப்போதும் கூறியதில்லை,” என்று தெரிவித்தது.
மேலும், “நாங்கள் உருவாக்குவது இயந்திரங்களை அல்ல; எதிர்காலத்தில் இந்த மாதிரியான தொழில்நுட்பங்களை இந்தியாவில் (பாரதத்தில்) வடிவமைத்து, பொறியியல் செய்து, உற்பத்தி செய்யக்கூடிய அறிவுள்ள மனிதர்களை,” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
Unitree ரோபோ நாய் என்றால் என்ன?
Unitree Robotics தயாரிக்கும் “ரோபோ நாய்கள்” என்பது, உண்மையான விலங்குகளைப் போல நடந்து, ஓடி, தடைகளை கடந்து செல்லக்கூடிய, நான்கு கால்கள் கொண்ட மேம்பட்ட ரோபோக்களின் தொகுப்பாகும். இவை தொழிற்சாலை ஆய்வு, பாதுகாப்பு கண்காணிப்பு, தடைகளைச் சரிபார்த்தல், பொழுதுபோக்கு போன்ற பல்வேறு பணிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
Unitree நிறுவனம், இதுபோன்ற ரோபோக்களை குறைந்த விலையில், எளிதில் கிடைக்கக்கூடிய வகையில் உருவாக்குவதற்காக அறியப்படுகிறது.
இது Boston Dynamics நிறுவனத்தின் Spot போன்ற உயர்விலை ரோபோக்களுக்கு போட்டியாகக் கருதப்படுகிறது..



