நடிகை ராதிகா, சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது ஒரு ரசிகை செய்த செயல் அவரை கடுப்பாக்கியது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகள் ராதிகா. பிரபல வில்லன் நடிகர் ராதாரவியின் தங்கை இவர். வெளிநாட்டிற்கு சென்று படித்துவிட்டு திரும்பிய இவர், 1978இல் வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ படம் மூலம் அறிமுகமானார். பின்னர், இவரைத்தேடி பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இயக்குநர் பாரதிராஜாவுக்கு பிடித்தமான நடிகைகளுள் இவரும் ஒருவர். நடிகர் ரஜினியுடன் பல படங்களில் நடித்துள்ளார். 2001இல் ராதிகாவும் பிரபல நடிகர் சரத்குமாரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் நடிகை ராதிகா, சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு சென்றிருந்தார். அவர் சாமி தரிசனம் செய்துவிட்டு கோயிலில் இருந்து வெளியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை சூழ்ந்த சில ரசிகர்கள் ஆங்காங்கே நின்று செல்ஃபி எடுத்து கொண்டிருந்தனர். அப்போது நடுத்தர வயதுடைய ஒரு ரசிகை ஓடி வந்து ராதிகா மீது கை போட்டது போல போஸ் கொடுத்தார். இதை சற்றும் எதிர்பாராத ராதிகா, திகைத்து போய் திரும்பி பார்த்து அந்த ரசிகையை முறைத்தார்.
பின்னர், ராதிகாவிற்கு அருகில் இருந்தவர்கள் அந்த ரசிகையை ‘தொடாதீர்கள்… தொடாதீர்கள்..’ என எச்சரித்தனர். இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள் ராதிகாவையும், அவரது அனுமதி இல்லாமல் அவர் மீது கை போட்ட ரசிகையை விமர்சித்து வருகின்றனர்.