தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை சமந்தா தற்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பட வாய்ப்புகளையும் கைப்பற்றி நடிக்க துவங்கி விட்டார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனாக எடுக்கப்பட்ட ‘ஏ மாயா சேஸாவா’ படத்தில் நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார் சமந்தா. தன்னுடைய முதல் பட ஹீரோவானாக நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாகவும் மாறியது. சுமார் ஏழு வருடங்கள் உருகி உருகி காதலித்து வந்த சமந்தா, பெற்றோர் சம்மதத்துடன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும், கோவாவில் படு பிரமாண்டமாக நடந்தது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். குறிப்பாக சூப்பர் டீலக்ஸ், யூடர்ன் மற்றும் பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் போன்றவற்றில் இவர் நடித்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

பின்னர் கடந்த 2021இல் திடீரென தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவருமே தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தனர். இது சமூக வலைதளத்தில் மிகப்பெரிய விவாதங்களுக்கு ஆளான நிலையில், சில மாதங்கள் விவாகரத்து காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்த சமந்தா, ஆன்மீக பயணம் மற்றும் தன்னை தொழில் ரீதியாக பிசியாக வைத்து கொண்டார். ஒருவழியாக சமந்தா கணவருடனான விவாகரத்து சர்ச்சையில் இருந்து மீண்டு, மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கிய நிலையில், மயோசிட்டிஸ் பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்டார். சுமார் 6 மாதங்களுக்கு மேல் எழுந்து நடக்கக் கூட முடியாமல் அவதிப்பட்டு வந்த சமந்தா, பல்வேறு சிகிச்சைகளுக்குப் பின்னர் மீண்டும் அதில் இருந்து மீண்டு, பழையபடி உடற்பயிற்சி ஷூட்டிங் பணிகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
அதன்படி, தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கும் குஷி மற்றும் பாலிவுட் தொடரான சீட்டாடல் போன்ற வற்றில் சமந்தா நடித்து வருகிறார். இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு ஏற்பட்ட ரத்த காயத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்துள்ளார். அதில் இது உலகத்திற்கு காயமாக தெரியலாம், ஆனால் நாங்கள் இதை நகைகள் போன்று நினைப்பதாக பதிவிட்டுள்ளார். சமந்தா அர்ப்பணிப்போடு கூறியுள்ள வார்த்தை ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.