செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாஸ்ரீயை திருமணம் செய்து கொண்டதை மறைக்கும் விதமாக அதனை விளம்பர படப்பிடிப்பு என்று இன்ஸ்டாகிராமில் பதிவிடச்சொல்லி காதல் மனைவியை செல்லம்மா சீரியல் நாயகன் அர்னவ் நிர்பந்திக்கும் ஆடியோ வெளியாகி உள்ளது.
செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாஸ்ரீ-யை காதலித்து மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டு கர்ப்பிணியானதும் ஏமாற்றிய குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்தான், செல்லம்மா சீரியல் ஹீரோ அர்னவ் என்கிற நைனாமுகமது. நடிகை திவ்யஸ்ரீயிடம் வாக்குமூலம் பெற்று, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை போலீசார் அளித்த தகவலின் பேரில், ஏமாற்றிய காதல் கணவன் அர்னவை திருவேற்காடு காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தனர். இதையடுத்து, தான் ஏமாற்றவில்லை என்று ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார் அர்னவ். தன் மீது எந்த தவறும் இல்லை என்பது போல போலீசாரிடம் அர்னவ் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதில் தெரிவிக்கும் வகையில், நடிகை திவ்யாஸ்ரீ சென்னை காவல் ஆணையரகத்தில் கண்ணீர் மல்க புகார் தெரிவித்ததோடு அர்னவ் தங்கள் திருமணத்தை மறைக்க பேரம் பேசிய ஆடியோ ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். தங்களது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியே தெரியும் வகையில், திவ்யஸ்ரீ இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருப்பதை நீக்க வேண்டும் என்றும் தனக்கும் திவ்யஸ்ரீக்கும் நடந்த திருமணத்தை விளம்பரப் படத்தின் படப்பிடிப்பு என்று பொய்யாக பேசி வீடியோ பதிவிடச்சொல்லி அர்னவ் நிர்பந்தித்தது அந்த ஆடியோ மூலம் அம்பலமாகி உள்ளது.

இதற்கிடையே காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கின் விசாரணைக்கு 4 மணி நேரம் ஆஜராகி விட்டு காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த அர்னவுடன், அவரது சீரியல் ரசிகைகள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.