அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உட்பட பல முண்ணனி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போரை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது.
இந்தப் படத்திற்காக பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு போர்க்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ஏற்கனவே தென்காசியில் அனுமதியின்றி நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. தென்காசி மத்தளம்பாறை அருகே உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பாதுகாப்பு மண்டலத்தில் உரிய அனுமதியின்றி செங்குளம் கால்வாயின் குறுக்கே மரப்பாலம் அமைத்து, அதன் கரைகளை சேதப்படுத்தி, வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அத்துடன் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒளியிலான பீம் லைட்கள் மற்றும் தீயை எரிப்பது மட்டுமல்லாமல், வெடிகுண்டு வெடிப்புகள் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகளை படக்குழுவினர் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் படமாக்கியதாக கூறப்பட்டது. இதையடுத்து, உரிய அனுமதி வாங்கவில்லை எனக்கூறி படப்பிடிப்பு நடத்த மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தடை விதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன்பிறகு மீண்டும் அனுமதிக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்ற பின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு தொடங்கியது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், உரிய அனுமதி பெறாமல் இங்கும் குண்டு வெடிப்பு காட்சிகள் படமாக்கப்படுவதாக அரிட்டாபட்டி பாதுகாப்புச் சங்கம் புகார் அளித்துள்ளது. இதனால் மீண்டும் படப்பிடிப்பு தடைபடும் சூழல் உருவாகியுள்ளது. இனியாவது முறையான அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்துங்கள் என ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.