’கோப்ரா’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோவின் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில், சியான் விக்ரம் நடித்துள்ள ’கோப்ரா’ திரைப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். இந்த படத்தை அரசு மற்றும் தனியாரின் 29 இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 1788 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, பல மாதங்கள் உழைப்பில் மிகுந்த பொருட்செலவில் பல போராட்டங்களுக்கு பிறகு படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும், திரைக்கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார். இதையடுத்து, ’கோப்ரா’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.