பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் திருப்பூர் மாவட்ட சப்-கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் சின்னி ஜெயந்த் 1984ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த கை கொடுக்கும் கை என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இவர் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், 30 ஆண்டுகளுக்கும் மேல் இவர் திரைத்துறையில் நடித்து வருகின்றார். நடிகர் மட்டுமல்லாது தயாரிப்பாளர், இயக்குனர், மிமிக்ரி கலைஞர் என பன்முக திறமை கொண்ட இவர். பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்சிகளிலும், நாடகங்களிலும் பணியாற்றி இருக்கிறார். தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருதினை 2009ஆம் ஆண்டு பெற்றார். இவர் பல குரல் ஆராய்ச்சி செய்து வருவதற்காக சர்வதேச திறந்தவெளி மாற்று மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் குடிமைப்பணி தேர்வுகள் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் 2020ஆம் ஆண்டு வெளியான நிலையில், நடிகர் சின்னி ஜெயந்தின் மகனான ஸ்ருதன் ஜெய் நாராயணன், தேசிய அளவில் 75ஆவது இடத்தை பிடித்தார். இதையடுத்து, அவருக்கு முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. பணி நிறைவடைந்த பிறகு 12 பேர் ஐஏஎஸ் அதிகாரிகளாக தமிழக அரசு பணிக்கு திரும்பிய நிலையில், மத்திய அரசு பணியில் இருந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன், முதன் முறையாக தூத்துக்குடி பயிற்சி துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், தற்போது சுருதன் ஜெய் நாராயணன் திருப்பூர் மாவட்ட சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, நடிகர் சின்னி ஜெயந்துக்கும், அவரது மகனுக்கும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் சின்னி ஜெயந்த் பகிர்ந்துள்ள நிலையில், லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.