’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் விஜே விஷால் எலிமினேட் செய்யப்பட்டது சர்ச்சையான நிலையில், அதுகுறித்து சிவாங்கி ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பேமஸ் ஆன நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். சமையல் நிகழ்ச்சி என்றாலே பரபரப்பாக இருக்கும். ஆனால் பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பது தான் இந்நிகழ்ச்சியின் ஸ்பெஷல். இதன் காரணமாகவே இந்நிகழ்ச்சி டிஆர்பியிலும் டாப்பில் இருக்கிறது. தற்போது 4-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் விசித்ரா, ஷெரின், ஸ்ருஷ்டி, விஜே விஷால், காளையன், ஆண்ட்ரியன், மைம் கோபி உள்பட மொத்தம் 10 பிரபலங்கள் குக் ஆக களமிறங்கினர். இதில் மற்றுமொரு ஸ்பெஷல் என்னவென்றால் கடந்த 3 சீசன்களாக கோமாளியாக கலக்கி வந்த சிவாங்கி இந்த சீசனில் குக் ஆக களமிறங்கி அசத்தி வருகிறார். இதற்டையே நேற்றைய எபிசோடில் விஜே விஷால் எலிமினேட் செய்யப்பட்டார்.
இறுதியில் சிவாங்கிக்கும், விஜே விஷாலுக்கும் இடையே தான் போட்டி நடந்தது. இதில் விஷால் சரியாக சமைக்கவில்லை எனக்கூறி நடுவர்கள் அவரை எலிமினேட் செய்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த சீசனில் ஷெரின், ஸ்ருஷ்டி, சிவாங்கி ஆகியோரை வேண்டுமென்றா காப்பாற்றி வருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை நெட்டிசன்கள் சாடி வந்தனர். இந்த சர்ச்சைகள் குறித்து சிவாங்கி மனம்திறந்து பேசி உள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், “இந்த சீசன் தொடங்கியதில் இருந்தேன் நான் எப்படி சமைக்கிறேன் என்பது பற்றி ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவி வருகின்றன. ஷூட்டிங்கிற்கு முன் தினமும் நான் 6 முதல் 7 மணிநேரம் வரை சமைத்து பயிற்சி எடுக்கிறேன். நான் மட்டுமல்ல எல்லாருமே அப்படித்தான். சிறந்த பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்பதற்காக பல தியாகங்களை நாங்கள் செய்கிறோம்.
கோமளிகளும் அவர்களது கெட்-அப்பிற்காக நிறைய சிரமம் எடுத்து தயாராகிறார்கள். நாங்கள் எல்லாம் இவ்வளவு கஷ்டப்படுவது உங்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகத் தான். இதை ஒரு ஷோவாக பார்த்து மகிழுங்கள். ஒருவரது உழைப்பை உதாசினப்படுத்துவது மிகவும் ஈஸி. எங்களது உழைப்பைத் தாண்டி அந்த நாள் நன்றாக இருந்தது என்றால் உணவும் சிறப்பாக வரும். அப்படி வரவில்லை என்றால் அது எனக்கான நாளாக இல்லை. ஜாலியாக இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.