தனுஷ் நடித்த ’வாத்தி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நேற்று வெளியான நிலையில், தற்போது ’நானே வருவேன்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷின் ”நானே வருவேன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். மேலும், அவரது சகோதரரும் திரைப்பட இயக்குநருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வருவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப்படத்தின் மூலம் பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தை வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
![தனுஷின் ‘நானே வருவேன்’ ரிலீஸ் தேதி வெளியானது..! தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/Dhanush-1.jpg)
தனுஷின் முந்தைய படமான திருச்சிற்றம்பலம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல லாபம் ஈட்டி வரும் நிலையில், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும், இந்தப் படத்தின் மூலம் தனுஷ் தனது சகோதரர் செல்வராகவனுடன் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார் என்பதாலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் செல்வராகவனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இருவரும் துள்ளுவதோ இளமை, கண்டு கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் இவர்கள் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், தற்போது ”நானே வருவேன்” படம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.
![தனுஷின் ‘நானே வருவேன்’ ரிலீஸ் தேதி வெளியானது..! தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/WhatsApp-Image-2022-09-20-at-12.55.05-PM.jpeg)
இந்நிலையில், தனுஷ் நடித்த ’வாத்தி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நேற்று வெளியான நிலையில், தற்போது ’நானே வருவேன்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்.29ஆம் தேதி ’நானே வருவேன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.