விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. இதில் அசீம், விக்ரமன், அமுதவாணன், மைனா, ஷிவின் ஆகிய 5 பேர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது இந்த வார இறுதியில் தெரிந்துவிடும். இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த முறை பிக்பாஸ் போட்டியாளரான விக்ரமனுக்கு அரசியல் தலைவரே வாக்கு கேட்டு பதிவிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. விக்ரமன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராக உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு, அக்கட்சியின் தலைவரும், எம்பி-யுமான தொல்.திருமாவளவன் ட்விட்டரில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
திருமாவளவனின் பதிவை குறிப்பிட்டு எப்படி ஒரு அரசியல் தலைவர், ஆதரவாளர்களை தூண்டிவிட்டு ஒரு ரியாலிட்டி ஷோவுக்கு வாக்களிக்க செய்ய முடியும் என கேள்வி எழுப்பி வந்தார். வனிதாவின் இந்த எதிர்ப்பை தொடர்ந்து அவருக்கு அக்கட்சியினர் சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மற்றொரு பதிவில் வனிதா கூறுகையில், “நான் பேசிய யூடியூப் சேனலுக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்தும், என்னை எச்சரிக்கவும் முயல்கின்றனர். யாருக்கும் எதுக்கும் பயந்தவ நான் இல்ல. உங்க அரசியல் புத்தி எண்ணனு காலம் காலமா பாத்திருக்கோம். நேர்மையா மக்களுக்கு நல்லது பண்ணி முன்னேற பாருங்க. உங்க அரசியல் எல்லாம் என்கிட்ட வெச்சிக்காதீங்க. ஒரு பிக்பாஸ் ஜெயிக்கிறதுக்கே இவ்வளவு அரஜாகம்னா, இவங்கள மாதிரி அரசியல் கட்சிகள், தேர்தல் வரும்போது என்னென்ன செய்வாங்க. நீங்க உங்க அரசியல் வேலையை பாருங்க. நான் உங்கள தொந்தரவு பண்ணல. நீங்களும் எங்கள தொந்தரவு செய்யாதீங்க” என பதிவிட்டுள்ளார்.