பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான, தாமரை செல்வி இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன் உட்பட சிலர் உதவி செய்ததன் மூலம், தன்னுடைய பெற்றோருக்கு புதுக்கோட்டையில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ள நிலையில், இந்த வீட்டின் கிரஹப்பிரவேசம் எப்போது என்பதை அறிவித்து அனைவரையும் வாழ்த்த அழைத்துள்ளார்.
தெரு கூத்து கலைஞரான தாமரை செல்வி, தன்னுடைய சிறு வயதில் இருந்தே மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் வளர்ந்தவர். இவரின் பெற்றோர் தற்போது வரை, குடிசையில் தான் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். தங்களின் குடும்ப கஷ்டத்தின் காரணமாக, சிறு வயதிலேயே தாமரை செல்வியை, அவரை விட 20 வயது மூத்தவருக்கு திருமணம் செய்து வைத்த நிலையில், சில வருடங்களில் இருவரும் விவாகரத்து பெற்றனர். முன்னாள் கணவர் மூலம் தாமரை செல்விக்கு மகன் ஒருவரும் இருந்தார்.
ஆகையால், தன்னுடைய மகனுக்கு தன் மீது எந்த தப்பும் இல்லை, என் மகன் என்னிடம் வரவேண்டும் என்பதற்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார். தாமரையின் ஆசையை நிறைவேற்ற அவரின் 2-வது கணவரும் விரும்பினார். இதற்கிடையே, பிக்பாஸில் சாமர்த்தியமாக விளையாடி பைனல் வரை சென்றார். இவருக்கு பல லட்சம் கடன் இருந்தும், பிக்பாஸ் கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே செல்லாமல் நிலைத்து விளையாடியது, இவர் மீதான மதிப்பை கூடியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சில திரைப்படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்ததோடு, சில சீரியல்களிலும் நடித்தார்.
மேலும், தாமரையின் சொந்த ஊரான புதுக்கோட்டையில், அவரின் பெற்றோர் படும் கஷ்டத்தை பற்றி கேள்விப்பட்ட, இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன் கிரவுண்ட் ஃபண்டிங் மூலம் அவர்களுக்கு வீடு கட்டித்தர முடிவு செய்தார். இதற்கான பெரும் தொகையை அவர் வழங்கிய நிலையில், ரசிகர்கள் சிலரும் தாமரை சொந்த வீடு கட்ட உதவியுள்ளனர். இந்த வீடு பணிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், எதிர்பாராத விதமாக தாமரை செல்வியின் தந்தை கோபாலன் மரணமடைந்ததால் வீடு கிரஹப்பிரவேசம் செய்வது தாமதமானது.
இதை தொடர்ந்து தற்போது வீடு கிரஹப்ரவேச பத்திரிகையை வெளியிட்டு, ரசிகர்களை வரவேற்றுள்ளார். செப்டம்பர் 17 ஆம் தேதி, இந்த விசேஷம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில், சிறப்பு விருந்தினராக ஜேம்ஸ் வசந்தன் மற்றும் பிக்பாஸ் ஜக்கி பெர்ரி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.