கணவர் இறந்த பின்பு தனது நினைவாற்றல் குறைந்துவிட்டதாகவும், தன்னுடைய தற்போதைய நிலை குறித்தும் வெளிப்படையாக கூறியிருக்கிறார் நடிகை பானுப்ரியா.
தமிழ் திரையுலகில் 80களில் கொடிகட்டி பறந்த நடிகை பானுப்ரியா, தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். நடிப்பில் மட்டுமின்றி நடனத்திலும் தனது திறமையை காட்டிய இவர், கடந்த 1998ஆம் ஆண்டு ஆதர்ஷ் கவுஷல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அபிநயா என்ற மகளும் உள்ளார். பானுப்பிரியா, தமிழில் கடைசியாக கடைக்குட்டி சிங்கம், சில நேரத்தில் சில மனிதர்கள் படத்தில் நடித்திருந்தார். பின்பு படவாய்ப்பு குறைந்த நிலையில், தற்போது பேட்டி ஒன்றில் தன்னுடைய நிலையை குறித்து பேசியுள்ளார்.
தனது கணவர் இறந்த பின்பு, தனக்கு நினைவற்றல் குறைந்துவிட்டதாகவும், படப்பிடிப்பில் வசனங்களை கூட மறந்துவிடுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். எனது கணவரை நான் பிரிந்துவிட்டதாக கூறுகின்றனர். அவர் தற்போது உயிருடன் இல்லை என்பதால் அதைப்பற்றி பேசவிரும்பவில்லை. என்னைப் பற்றிய உடல்நிலை குறித்த வதந்தியும் பரவியது. அதுவும் உண்மை இல்லை. ஆண்டு தோறும் நடத்தப்படும் 80ஸ் நடிகர், நடிகைகளின் ரீயூனியன் நிகழ்ச்சியில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், தனக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை என கூறியுள்ளார்.
தனது மகள் லண்டனில் படித்து வருவதாகவும், தற்போது முழுநேரமும் வீட்டிலேயே இருப்பதாகவும், புத்தகம் படிப்பது, பாடல்களைக் கேட்பது, வீட்டு வேலைகளை செய்வது என தன்னை பிசியாக வைத்துக் கொள்வதாக நடிகை பானுப்ரியா தெரிவித்துள்ளார்.