நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த மாமன்னன் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் போலா சங்கர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர அரை டஜன் படங்கள் அவர் கைவசம் உள்ளன. இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷை, திரைத்துறையில் இருந்து ஓரங்கட்ட சிலர் முயன்றதாக பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ”தமிழ் சினிமாவை பொறுத்தவரை அழகும், அதிர்ஷ்டமும் கலந்த ஒரு நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ் தான். குறுகிய காலகட்டத்திலேயே டாப் ஹீரோஸ் உடன் நடித்திருக்கிறார். இவரை தமிழில் அறிமுகப்படுத்தியவர் ஏ.எல்.விஜய். அப்படம் தோல்வியை சந்தித்தாலும் கீர்த்திக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது. பின்னர் கீர்த்தி சுரேஷுக்கு பக்கபலமாக அமைந்த திரைப்படம் என்றால் அது மகாநடி தான்.
இந்த படத்துக்காக ஏகப்பட்ட நடிகைகளின் லிஸ்ட் கையில் இருந்து இயக்குனர் தேர்வு செய்தது கீர்த்தியை தான். அவரை தேர்ந்தெடுத்தபோது பலரும் விமர்சித்தார்கள். இதெல்லாம் எப்படி நடிக்க போகுதுனு கிண்டலடித்தார்கள். ஆனால், அப்படத்தில் தன் நடிப்பின் மூலம் சாவித்ரியை கண்முன் கொண்டுவந்து நிறுத்தி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். அப்படத்திற்கான டெஸ்ட் ஷூட்டிலேயே அவர் தன் திறமையை நிரூபித்துவிட்டார்.
கீர்த்தி சுரேஷ் திடீரென உடல் எடையை குறைத்த பின்னர் அவர் இனி அவ்வளவுதான் என ஏராளமானோர் விமர்சித்தனர். இதெல்லாம் ஒரு மூஞ்சியா, அவருக்கு அவ்ளோ தான் மார்க்கெட் போச்சு என்றெல்லாம் பேசினார்கள். அதெல்லாம் பார்க்கும்போது மிகவும் அசிங்கமாக இருந்தது. அவர் எந்த படத்திற்காக ஒல்லியானார் என தெரியவில்லை. ஆனால், தற்போது மீண்டும் பழைய நிலைக்கு வந்து, மார்க்கெட்டை பிடித்துவிட்டார்” என செய்யாறு பாலு கூறியுள்ளார்.