ஓடிடியில் வர இருப்பது திருமண வீடியோ இல்லை என்றும், நயன்தாராவின் வாழ்க்கை குறித்த ஆவணப்படம் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி திரையுலக நட்சத்திரங்கள் நேரில் சென்று வாழ்த்தினர். முழு திருமண நிகழ்ச்சியையும் வீடியோவில் பதிவு செய்து ஓடிடி தளத்துக்கு விற்பனை செய்திருப்பதாக, ஏற்கனவே பேசப்பட்டது. ஆனால், ஓடிடியில் வர இருப்பது திருமண வீடியோ இல்லை என்றும், நயன்தாராவின் வாழ்க்கை குறித்த ஆவணப்படம் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆவணப்படத்தில் நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து இருப்பதாக கூறப்படுகிறது. தன் உழைப்பால் எப்படி இந்த இடத்துக்கு உயர்ந்தேன் என்று விளக்கும் நயன்தாராவின் பேட்டியும், அவர் படப்பிடிப்பில் பங்கேற்கும் காட்சிகள், மேக்கப் போடுவது, விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட காதல் உள்ளிட்ட பல விஷயங்களும் ஆவணப்படத்தில் இடம்பெறும் என தெரிகிறது.

மேலும் நயன்தாரா குறித்து அவரை சார்ந்தவர்கள், பிரபலங்கள் என மற்றவர்கள் பேசும் பேட்டிகளும் அதில் இடம்பெறவுள்ளது. அதோடு திருமண புகைப்படம் மற்றும் வீடியோவையும் ஆவணப்படத்தில் இணைத்துள்ளனர். நேற்று முன்தினம் இந்த ஆவணப்படத்தின் டீசர் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.