‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய தரமான படங்களை அடுத்தடுத்து இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் நெல்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.
‘பீஸ்ட்’ திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் தன்னுடைய வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்கிற கட்டாயத்தில் நெல்சன் இருந்தார். அதேபோல் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார், அண்ணாத்த போன்ற படங்களும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.375 கோடி வசூலித்து உலக அளவில் மாஸ் காட்டியது. இதை தொடர்ந்து, ஜெயிலர் திரைப்படம் வெளியாகி 15 நாட்கள் ஆகும் நிலையில், இரண்டு வாரத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த படம் இரண்டு வாரத்தில் உலகம் முழுவதும் சுமார் ரூ.525 கோடி வசூலித்து, வரலாற்று சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்தாண்டு வெளியாகி 500 கோடி வசூலித்த பொன்னியின் செல்வன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை ‘ஜெயிலர்’ திரைப்படம் இரண்டே வாரத்தில் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.