”மாநகரம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் லோகேஷ் கனகராஜ். அப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து கார்த்தியுடன் கைதி படத்தை இயக்கினார். இப்படம் அவரை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது. கைதி படம் பார்த்து இம்பிரஸ் ஆன தளபதி விஜய், தனது மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷுக்கு கொடுத்தார். இதனை நன்கு பயன்படுத்திக் கொண்ட லோகேஷ், மாஸ்டர் படத்தை மாஸ் படமாக இயக்கி வெற்றி கண்டார்.
பின்னர் தன்னுடைய குருவான கமல்ஹாசன் உடன் கூட்டணி சேர்ந்த லோகேஷ், விக்ரம் என்கிற தரமான ஆக்ஷன் படத்தை இயக்கி தமிழ் சினிமாவையே மிரள வைத்தார். அதுமட்டுமின்றி இதில் எல்சியூ (LCU – Lokesh Cinematic Universe) என்கிற கான்செப்ட்டையும் அறிமுகப்படுத்தினார். விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் எல்சியூ கன்செப்ட் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரீச் ஆனது. விக்ரம் வெற்றிக்கு பின் விஜய்யுடன் மீண்டும் இணைந்து லியோ படத்தினை இயக்கி வருகிறார் லோகேஷ்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், எல்சியூ பற்றி பேசி இருந்தார். லியோ எல்சியூவில் வருமா, இல்லையா என்பது இன்னும் 3 மாதத்தில் உங்களுக்கு தெரியவரும் என கூறிய அவர், எல்சியூவில் 10 படங்கள் தான் இயக்குவேன், அதன்பின் நிறுத்திவிடுவேன் என ரசிகர்களுக்கு கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். எல்சியூ படங்கள் இயக்கும்போது வெவ்வேறு தயாரிப்பாளர்களிடம் தடையில்லா சான்று வாங்க வேண்டும் என நிறைய விஷயங்கள் இருப்பதாலும், ரசிகர்களுக்கு சோர்வை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக லோகேஷ் தெரிவித்துள்ளார்.