தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் சமூக வலைதளங்களில் பரவும் அவதூறுகள் மிகுந்த வேதனை அளிப்பதாக நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜா செல்வமணி தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் ரஜினி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். இதற்கிடையே, இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை காதலித்து 2002ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். அரசியலில் ஆர்வம் கொண்ட ரோஜா 1999-ல் தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். 2009-ல் அக்கட்சியை விட்டு விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ரோஜா பின்னாளில் எம்.எல்.ஏ ஆனார். இரண்டாவது முறையாக நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது ஆந்திராவின் சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.
![என் மகளின் புகைப்படத்தை இப்படி செய்வது..? கொந்தளித்த அமைச்சர் ரோஜா..!! மகளுக்கு சொன்ன அட்வைஸ்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2020/09/Roja-Daughter-Birthday-Celebrations-1599806094-108.jpg)
இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “நான் சினிமாவிலும் அரசியலிலும் எத்தனையோ பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறேன். ஆனால், சமூக வலைதளங்களில் சமீப காலமாக என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் வரும் அவதூறுகள் வேதனை அளிக்கிறது. பிறந்த நாளில் எனது சகோதரர் முத்தமிட்டதை கூட ஆபாசமாக்கி அசிங்கப்படுத்தினர். இப்போது என் மகளின் போட்டோவை மார்ஃபிங் செய்தும், என்னைப் பற்றி ஆபாசமான படங்களை வெளியிட்டும் வருகின்றனர். அதை பார்த்த என் மகள் மிகவும் கவலைப்பட்டாள். இதெல்லாம் நமக்குத் தேவையா? என என்னிடம் கேட்கிறாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. பிரபலங்களுக்கு இது போன்ற விஷயங்கள் எல்லாம் சகஜம்தான், இவற்றை பெரிதுபடுத்தி அதில் கவனம் செலுத்தினால், நம்மால் முன்னேற முடியாது, என என் குழந்தைகளுக்கு நானே சொல்லி வருகிறேன்” என்றார்.