மணிரத்னம் கதை எழுதி இயக்க கமல்ஹாசன் நடிப்பில் 1987ஆம் ஆண்டு ’நாயகன்’ திரைப்படம் வெளியானது. இளையராஜா இசையமைத்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. படம் வெளியாகி 35 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட சினிமா ரசிகர்களால் தொடர்ந்து கொண்டாடப்படும் திரைப்படமாக நாயகன் இருக்கிறது.

இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமான நாயகன் மிகப்பெரிய வெற்றியடைந்தாலும் கூட அதன் பின்னர் மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணி அதன் பின்னர் இணையவில்லை. இந்நிலையில், 35 ஆண்டுகளுக்குப்பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் ஆகியோர் இணையவுள்ளனர். நடிகர் கமல்ஹாசனின் 234-வது படத்தை மணிரத்னம் இயக்கவிருப்பதாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆகிய 3 நிறுவனங்களும் இணைந்து இந்தப்படத்தைத் தயாரிக்கவிருக்கின்றன. இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு சர்ப்ரைஸாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம்.