‘எனக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பதிலேயே இருக்கிங்க’ என மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார்.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் ‘மாமன்னன்’ படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘ராசா கண்ணு’ சென்ற வாரம் வெளியானது. யுகபாரதி எழுதியுள்ள இந்தப் பாடல் வடிவேலுவின் குரலில் வெளியானது. இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மாமன்னன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், ”தமிழில் நீண்ட நாட்கள் கழித்து என்னுடைய படம் வெளியாகிறது. மும்பையில் இருந்து வருவதால் லேட் ஆகிவிட்டது. இது மொத்தமாக வேறு ஒரு படமாக இருக்கும். இது ஒரு வித்தியாசமான படம். நான் இந்த படத்தின் ஒரு கம்யூனிஸ்டாக நடித்துள்ளேன். பொதுவான ஒரு விஷயம் பற்றி தான் இந்த படம் பேசுகிறது. எல்லாருக்கும் அது புரியும். எனக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பதிலேயே இருக்கிங்க. எனக்கு திருமணம் என்றால் கண்டிப்பாக சொல்கிறேன்” என்றார்.