இன்று பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கின்றது மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படம். இந்தப் படம் மக்களிடையே எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில், படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜின் பேச்சு பெரும் சர்ச்சையாக மாறி இருந்தது.
இதுபற்றி பேசிய பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன், மாரி செல்வராஜையும் கமலையும் உதயநிதியையும் ஒரு பேட்டியில் வறுத்து எடுத்திருக்கிறார். அதாவது தன் வலியை தன்னோடு வைத்திருக்க வேண்டுமே தவிர அதை வெளிப்படையாக அதுவும் ஒரு மேடையில் இந்த அளவுக்கு மாரி செல்வராஜ் பேசியிருக்கக் கூடாது. அவர் நினைக்கிற மாதிரி தமிழ் சினிமாவிலோ அல்லது நிஜத்திலயோ தாழ்த்தப்பட்டோர் உயர்த்தப்பட்டோர் என்ற ஒரு பிரிவினை இப்போது இல்லை.
ஆனால், எப்பவோ இருந்ததை இன்னமும் தூக்கி பிடித்துக் கொண்டு வருகிறார் மாரி செல்வராஜ். இந்த சமயத்தில் பேசும் மாரி செல்வராஜ் கர்ணன் படம் வந்த சமயத்தில் இதைப் பற்றி பேசியிருக்கலாமே. ஏன் பேசவில்லை. ஏனெனில், அந்த நேரத்தில் உள்ள ஆட்சி வேறு. இப்பொழுது நடக்கும் ஆட்சி வேறு. இப்பொழுது என்ன பேசினாலும் தன்னை யாரும் ஒன்று செய்ய முடியாது என்ற ஒரு கர்வத்தில் மாரி செல்வராஜ் இருக்கிறார்.
மேலும் கமலை பற்றி கூறிய மீசை ராஜேந்திரன், மேடையில் அண்ணன் வடிவேலு என்று சொல்வதா தம்பி வடிவேலு என்று சொல்வதா என்று கேட்டிருந்தார். கமல் எவ்வளவு பெரிய நடிகர். எவ்வளவு பெரிய ஒரு கலைஞன். அவர் போய் இப்படி சொல்லலாமா. இதுவும் வடிவேலுவை ஒரு பெரிய ஹைப்பில் தூக்கி விடுவதற்கான ஒரு முயற்சி தான் என்றும் மீசை ராஜேந்திரன் கூறினார்.
மேலும், உதயநிதி இப்பொழுது ஒரு அமைச்சர். மக்களுக்கான பிரச்சனைகள் ஏராளமாக இருக்கின்றது. ஒரு அமைச்சராக உதயநிதி பார்க்கும் வேலை இதுதானா? ப்ரோமோஷன் என்ற பெயரில் தினமும் இந்த பக்கம் நடிகை கீர்த்தி சுரேஷ், அந்தப் பக்கம் ஏ.ஆர்.ரகுமான் என நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு பக்கம் மக்களுக்கான பிரச்சனைகள் நிறைய கிடைக்கின்றன என்றும் மீசை ராஜேந்திரன் கூறினார்.