இளையராஜா இசையில் ஆயிரக்கணக்கான பாடல்கள் வெளியாகி இருந்தாலும், ஒரு சில பாடல்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு பிடித்த பாடல்களாக உள்ளன. அந்த வகையில், இளையராஜா இசையமைத்த பாடல்களான இளையநிலா, பாடும் வானம் பாடி போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இளையராஜாவுடன் இணைந்து, தன்னுடைய கிட்டார் இசையின் மூலம் பாடல்களை மெருகேற்றியவர் கே.சந்திரசேகர். இவர், கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், தன்னுடைய 79 வயதில் நேற்று உயிரிழந்தார். இவருடைய சகோதரர் மறைந்த ட்ரம்ஸ் கலைஞர் புருஷோத்தமன் அவர்களும் இளையராஜாவின் குரூப்பில் டிரம்ஸ்சராக இருந்தவர்.
இந்நிலையில், கே.சந்திரசேகர் மரணம் குறித்து இளையராஜா தன்னுடைய வீடியோ ஒன்றை சமுக வலைதளத்தில் வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “என்னுடன் பணியாற்றிய, எனக்கு மிகவும் பிரியமான, இசை கலைஞரான கே. சந்திரசேகர் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். அவர் என்னிடம் இருந்த புருஷோத்தமன் அவர்களின் சகோதரர் ஆவார். நாங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் மேடையில் இருந்து திரைக்கு வந்தவர்கள். அவர் என்னுடன் இணைந்து நிறைய பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அந்தப் பாடல்கள் தற்போது வரை மக்கள் மனதிலே நீங்காமல் உள்ளன. அவருடைய இறப்பில் மிகவும் வருத்தம் அடைகிறேன். அவருடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.