லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரைத்துறையை விட்டு விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
”ஐயா” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக தற்போது வலம் வருகிறார். அவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சிம்பு மற்றும் தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். அவர் தெலுங்கு, மலையாளம் என தன் நடிப்பால் நம்பர் ஒன் நடிகையாகி லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா திரையுலகில் இருந்து விலக போவதாகவும், அதற்கு ஒரே ஒரு காரணம்தான் என்று தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் நயன்தாரா, தனது நீண்டநாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இதனால், நடிகை நயன்தாரா தற்போது ஒப்பந்தமாகிருக்கும் படங்களை முடித்துவிட்டு திரையுலகில் இருந்து விலகப் போவதாகவும் பட தயாரிப்பு பணிகளை மட்டும் கவனிக்க இருப்பதாகவும் அதற்கு ஒரே காரணமாக தாலி சென்டிமென்ட் என்று கூறப்படுகிறது.
நயன்தாராவின் குடும்பத்தினர் எந்த காரணத்தை முன்னிட்டும் படப்பிடிப்பின்போது தாலியை கழட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளதால், தற்போது அவர் நடித்து வரும் படங்களில் கூட தாலியை கழட்டாமல் தான் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, பல்வேறு கேரக்டரில் நடிக்கும்போது தாலியை கழற்றி வைத்துவிட்டு நடிக்கும் நிலை ஏற்படும் என்பதால், திரையுலகில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து திரைப்படங்களை தயாரிப்பார் என்றும் அதன் மூலம் பல புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்க நயன்தாரா முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.