எதிர்காலத்தில் நடக்க இருக்கும் கதை, சூர்யாவிடம் அந்த கதையைச் சொல்லிவிட்டேன், கதையில் சில மாற்றங்கள் செய்ய இருப்பதாக பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கிய ’நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதே நேரத்தில் பல்வேறு தரப்பட்ட மக்களின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. அப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித் சியான் விக்ரம் 61-வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து, விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படம் 90 கால கட்டத்தில் கேஜிஎஃப் இல் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் என ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த இந்த படத்தின் பூஜையில் நடிகர் சிவகுமார், ஆர்யா, நடன இயக்குநர் சாண்டி, கலையரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ.ஞானவேல் ராஜா நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். அதன் பிறகு இயக்குநர் ரஞ்சித்தின் கனவு திரைப்படமான German என்ற திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படத்தின் கதையை நடிகர் சூர்யாவிடம் சொன்னதாகவும் விக்ரம் படத்தை முடித்துவிட்டு அதைத் தொடங்குவார் எனவும் கூறப்படுகிறது. German படத்தில் நிறைய VFX காட்சிகள் இருக்கும் எனவும் அதிக பொருட்செலவில் உருவாகும் எனவும் கூறப்படுகிறது.
ஒரு மதுவிற்கு அடிமையான விமான ஓட்டி சூர்யா, பெர்முடா முக்கோணத்தால் வேறொரு உலகத்திற்குத் தொலைந்து போகிறார். பின் அங்குள்ள மக்கள் அவரை கண்டுபிடித்து அவரைத் தங்கள் இலட்சியங்களுக்காக எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதே கதையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், ரஞ்சித் German படம் குறித்துப் பரவி வரும் கதை உண்மையல்ல அது எதிர்காலத்தில் நடக்க இருக்கும் கதை. சூர்யாவிடம் அந்த கதையைச் சொல்லிவிட்டேன், கதையில் சில மாற்றங்கள் செய்ய இருக்கிறேன் என கூறியிருக்கிறார். ஆனால், சூர்யா ரசிகர்கள் சிலரோ German திரைப்படம் குறித்த போஸ்டர்களை அவர்களே வடிவமைத்து இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.