‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் நடித்திருக்கும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நாளை நாடு முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்தை அரசு மற்றும் தனியாரின் இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 2,405 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, மிகுந்த பொருட்செலவில் படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். இதனால், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்” என்று வாதிட்டார். இதையடுத்து, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.