தமிழ் சினிமாவில் தற்போது டிரெண்டிங்கில் உள்ள இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். கோலிவுட் முதல் பாலிவுட் வரை இவரின் கால்ஷீட்டுக்காக முன்னணி நடிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். வெறும் 4 படங்களே இயக்கியிருந்தாலும், அவை அனைத்துமே தரமான படங்களாக கொடுத்து மக்களை கவர்ந்தார் லோகேஷ். மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்கி வருகிறார். பான் இந்தியா படமாக தயாராகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இவர்களுடன் சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளது.

இது LCU (Lokesh Cinematic Universe) படமா அல்லது புது கதைக்களத்தில் உருவாகும் படமா என்பதே இன்னும் உறுதியாக தெரியாத நிலையில், தற்போது LCU-வில் மற்றொரு நடிகர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் யாரென்றால், பொன்னியின் செல்வனாக நடித்து கலக்கிய ஜெயம் ரவி தான். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை காட்டி இந்த காம்போ இணைய வாய்ப்பு இருக்கா? என ஜெயம் ரவியிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜெயம் ரவி, லோகேஷ் கனகராஜ் தனக்கு ஒரு கதை சொல்லி இருப்பதாகவும், அந்த கதை வேறலெவலில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் சொல்வதைப் பார்த்தால், ரோலெக்ஸ் சூர்யா போல் விரைவில் LCU-வில் இணைந்துவிடுவார் போல தெரிகிறது என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபட தொடங்கி உள்ளது. ஜெயம் ரவி நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ரிலீசாகும் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு அவர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைக்க உள்ள செய்தி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.