விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களான பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி உள்ளிட்ட தொடர்களில் தயாரிப்பு மேலாளராக பணிபுரிபவர் சாய் கணேஷ். இவர், சின்னத்திரை வட்டாரத்தில் ‘பாபு’ என அழைக்கப்படுகிறார். இவருக்கும் ‘அன்பே சிவம்’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘பிரியமான தோழி’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்த நடிகை தீபாவுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
நடிகை தீபாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். ஆனால், முதல் திருமண வாழ்க்கைச் சுமூகமாக அமையாததால் முறைப்படி விவாகரத்து பெற்று கணவரை பிரிந்தார். பின்னர், தீபாவுக்கு இது இரண்டாவது திருமணம் என்பதால் இந்தத் திருமணத்தை பாபுவின் வீட்டில் சம்மதிக்கவில்லையாம். பலத்த எதிர்ப்பும் தீபாவுக்கு மிரட்டலும் இருந்திருக்கிறது. எனவே, இந்த ஜோடி திருமணத்தை பதிவுத் திருமணமாக எளிமையான முறையில் செய்து கொண்டுள்ளனர்.
ஆனால், இருவருக்குமான ரகசியத் திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நடந்து விட்டதாகவும், பாபுவின் வீட்டில் திருமணத்துக்கு எதிர்ப்பு இருந்ததால் இதுவரை வெளியில் சொல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. நடிகை தீபாவின் இந்த திருமணம் சின்னத்திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், அவருக்கு இந்த வாழ்க்கையாவது நன்றாக அமைய வேண்டும் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.