விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியல் மூலம் அறிமுகமானவர், கன்னட சீரியல் நடிகையான ரக்ஷிதா மகாலட்சுமி. இவருக்கு கிடைத்த வரவேற்பும், தமிழ் மக்கள் கொடுத்த அன்பும், இவரை நிரந்தரமாக தமிழ் சீரியல் நடிகையாகவே மாற்றிவிட்டது. பின்னர் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்கள் பட்டி தொட்டி எங்கும் இவரை பிரபலமடைய செய்தது. ஒரு சில திரைப்பட வாய்ப்புகளையும் இவர் கைப்பற்றிய நிலையில், அந்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் ரக்ஷிதா, ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 10 வருடங்கள் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்த இந்த ஜோடிக்கு இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட கருத்து வேறுபாடு, தற்போது விவாகரத்து வரை வந்துள்ளது. தினேஷ் ரக்ஷிதாவுடன் வாழ தயாராக இருந்தாலும், ரக்ஷிதா இனி அவருடன் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்பது போல் சில பேட்டிகளில் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 90 நாட்களுக்கு மேல் தாக்குபிடித்த இவர், கடைசி சில வாரங்களில் கடுமையான போட்டியின் காரணமாக, மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ரக்ஷிதா, திரைப்படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது அதிரடியாக புதிய சீரியல் ஒன்றில் கெத்தான போலீஸ் அதிகாரி கெட்டப்பில் என்ட்ரி கொடுக்க உள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றை தன்னுடைய சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.