மதுரை மாவட்டம் அண்ணாநகரில் உள்ள அம்பிகா திரையரங்கில் ஜெயிலர் திரைப்படத்தின் 25-வது நாளையொட்டி ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்ட வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ரஜினி ரசிகர்கள் ரஜினியின் பேனர்களுக்கு மாலை அணிவித்து, சூடமேற்றி பூசணிக்காய் சுற்றி வழிப்பட்டனர். இதனைத் தொடர்ந்து திரையரங்கிற்கு வந்த நடிகர் சரவணனை ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தோடு வரவேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரவணன், “நடிகர் ரஜினிகாந்த் ஒரு சித்தர் போல. இன்று, நாளை, அடுத்து என்ன நடக்கும் என அவருக்கு எல்லாமே தெரியும். ரஜினியின் காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்கிய ஒரே மாதத்தில் ஹீரோ ஆனவன் நான். ஜெயிலர் படம் ஹிட் ஆகும் எனத்தெரிந்து தான் ரஜினி இமயமலைக்கு சென்றார்.
ரஜினியின் வாக்கு சித்தர் வாக்கு. ரஜினி ஒரு கடவுள் தான். அதை மதுரையில் உட்கார்ந்து கொண்டு சொல்கிறேன். ரஜினி சாரிடம் எல்லாமே எனக்கு பிடிக்கும். ரஜினி சாரை பார்த்து இன்று வரை ரஜினி சார் மாதிரி சட்டை போட்டு வருகிறேன். ரஜினிக்கு ஆளுநர் பதவி கிடைக்க உள்ளதாக குறித்த கேள்விக்கு, ஆளுநர் பதவியெல்லாம் ஒன்றும் அவருக்கு வேண்டாம். அவர் நன்றாக உடல்நலத்தோடு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் எதுவுமே செய்யாமல் சும்மா இருந்தா போதும். அவர் எந்த கட்சிக்கும் ஆதரவு கொடுக்க வேண்டாம்.
ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த சரவணன், பாவம் வேண்டாம். விட்டுருங்க அவர. அரசியலுக்கு அவர் வர வேண்டாம் நிம்மதியாக இருக்கட்டும் என பேசினார். ஓபிஎஸ் ரஜினிகாந்த்தை சந்தித்து என்ன பேசினார் என யாருக்குமே தெரியாது. சாப்பிட்டிங்களா குடும்பத்தில் எல்லோரும் எப்படி இருக்காங்க என்று கூட பேசி இருக்கலாம்” என கூறினார்.