தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவரது சகோதரர் ஜெகதீசன். இவர், கல்லீரல் செயலிழப்பு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 55 வயது ஆகும் நிலையில், தம்பியின் மரணத்தால் வடிவேலு உள்பட அவரது குடும்பத்தினரே சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
நடிகர் வடிவேலுவுக்கு உடன் பிறந்த சகோதரர்கள் 3 பேர். இதுதவிர அவருக்கு இரண்டு தங்கைகளும் உண்டு. சினிமாவில் தான் சம்பாதிக்கத் தொடங்கியதும், தன் உடன் பிறந்தவர்களை நன்கு பார்த்துக் கொண்டதோடு அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்து வடிவேலு அழகு பார்த்ததாக அவருடைய தம்பி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த அளவுக்கு குடும்பத்தினர் மீது பாசம் கொண்டவராக இருந்துள்ளார் வடிவேலு.
அவரின் குடும்பத்தில் தற்போது இழப்பு ஏற்பட்டிருப்பது வடிவேலுவை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. வடிவேலுவின் சகோதரர் ஜெகதீசன் மதுரையில் ஜவுளி வியாபாரம் பார்த்து வந்துள்ளார். இவர் டி.ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்திருக்கிறார். அப்படத்தோடு சினிமாவில் நடிப்பதையும் நிறுத்திக் கொண்ட இவர், பின்னர் ஜவுளி வியாபாரம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.