‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் விக்ரமன் தமிழ்நாடு குறித்தும், தமிழ்நாடு என்ற பெயருக்கு போராடிய சங்கரலிங்கனாரின் தியாகம் குறித்தும், தமிழ்நாடு என்று அறிஞர் அண்ணா பெயர் சூட்டியது குறித்தும் பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் நிகழ்வு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் எனவும், 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளால் தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார். அவரின் இந்த கருத்து தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் என பலதரப்பில் இருந்து ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ட்விட்டரில் ‘தமிழ்நாடு’ என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆனது.
![’தமிழ்நாடு எப்போதும் தமிழ்நாடு தான்’..!! பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓங்கி ஒலித்த குரல்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-17-at-8.21.14-AM.jpeg)
அதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் தமிழ்நாடு, திராவிட மாடல், தலைவர்களின் பெயர்கள் ஆகியவற்றை உச்சரிக்க மறுத்த ஆளுநரை கண்டித்தும் அது அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது, ஆளுநர் பாதியில் வெளிநடப்பு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது அதன் பின்னர் #GetOutRavi என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் வீட்டுக்குள் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி சென்றுள்ள நிலையில், அவரிடம் விக்ரமன் பொங்கல் அன்று தமிழ்நாட்டிற்கு எப்படி தமிழ்நாடு என்கிற பெயர் வந்தது என்பது குறித்து பேசியிருக்கிறார். இதுகுறித்த வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.