நடிகை கஜோல், 50 வயதை நெருங்கப்போகிறார் என்றாலும், இன்றளவும் பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். அவர் கடந்த 1992ஆம் ஆண்டு பாலிவுட் உலகில் தனது திரைப்பயணத்தை துவங்கிய நிலையில், 1997இல் ராஜூ மேனன் இயக்கத்தில் வெளியான “மின்சார கனவு” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சுமார் 20 ஆண்டுகள் கழித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுவரை இரண்டு திரைப்படங்கள் மட்டுமே தமிழில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட, தமிழில் இவருக்கு மாபெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது.
இந்நிலையில், ஒரு தனியார் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கஜோலின் பேச்சு கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுகையில், “நம் இந்திய திருநாட்டில் மாற்றம் என்பது சற்று மெதுவாகத்தான் நிகழும், இன்னும் சொல்லப்போனால் அது மிக மிக மெதுவாகத் தான் நடக்கும். ஏனெனில், இன்னமும் நாம் நம்முடைய பாரம்பரியங்கள் மற்றும் செயல்முறைகளிலேயே முற்றிலுமாக மூழ்கி போயிருக்கிறோம்”.
“படிப்பறிவு இல்லாத அரசியல் தலைவர்கள் நம் நாட்டில் இருக்கின்றனர். அவர்கள் தான் நம்மை வழிநடத்தி செல்கிறார்கள். ஆனால், அவர்களில் பலருக்கு கண்ணோட்டம் என்பதே இல்லை. அது கல்வியின் மூலம் தான் கிடைக்கும். கல்வி மிகவும் முக்கியம்” என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. ட்விட்டர் தளத்திலும் பிற இணையதளத்திலும் கஜோலுக்கு எதிராக பலர் கண்டங்களை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு தகவலை அவர் வெளியிட்டுள்ளார். அதில் “நான் கல்வியின் முக்கியத்துவம் குறித்தே பேச விரும்பினேன். எந்த ஒரு அரசியல் தலைவரையும் குறிப்பிட்டோ அல்லது அவர்களை புண்படுத்த வேண்டும் என்றோ நான் பேசவில்லை. நம்மை சிறப்பாக வழிநடத்தும் நல்ல தலைவர்கள் இங்கு இருக்கின்றார்கள்” என்று அவர் அந்த பதிவில் கூறியிருந்தார்.