மதுரையில் கண்ணாடி கடையில் ஃபிரேம் ஒட்டும் வேலை பார்த்து வந்தவர் வடிவேலு. சில இடங்களில் இரவு வாட்ச்மேனாகவும் பணியாற்றியுள்ளார். நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ராஜ்கிரணின் அறிமுகம் கிடைக்கவே, வடிவேலுவிடம் திறமை இருக்கிறது என கணித்து அவர் தயாரித்த ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் அவரை அறிமுகம் செய்தார். ஏனெனில், கவுண்டமணிக்கு மாற்றாக ஒருவரை கொண்டுவர வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு இருந்தது.
ஒல்லியான தேகம், பாடும் திறமை, வித்தியாசமான உடல்மொழி என தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் வடிவேலு. முதல் படத்திலேயே இளையராஜாவிடம் ரெக்கமெண்ட் செய்து அவருக்கு ஒரு பாடலையும் வாங்கி கொடுத்தார் ராஜ்கிரண். தேவர் மகன் திரைப்படத்தில் அவருக்கு ஒரு நல்ல வேடத்தை கொடுத்தார் கமல்ஹாசன். பின்னர், பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தார்.
கவுண்டமணியின் அட்ராசிட்டியை பொறுத்துக்கொள்ள முடியாத இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வடிவேலு பக்கம் சென்றனர். இதனால், அவருக்கான மார்க்கெட் அதிகரித்தது. அதில் அவருக்கு தலைக்கணமும் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகர் ஆனதும் அவரின் அலப்பறைக்கு அளவே இல்லாமல் போனது. இயக்குனர் சொன்ன காட்சியை மாற்றுவது, தன்னுடையை உடையை மாற்றுவது, தன்னுடன் இந்த காமெடி நடிகர் மட்டுமே நடிக்க வேண்டும் என சொல்வது, தாமதமாக படப்பிடிப்புக்கு வருவது, அதிக சம்பளம் கேட்பது, குறைவான நேரம் மட்டுமே நடிப்பது, துணை நடிகைகளை அழைத்துக்கொண்டு பண்ணை வீட்டுக்கு செல்வது என அவர் மீது தயாரிப்பாளர்கள் ஏகப்பட்ட புகார்களை கூறியுள்ளனர்.
ஆனாலும், வடிவேலுவின் காமெடியை மக்கள் ரசித்ததால் அவரை தொடர்ந்து நடிக்க வைத்தனர். திரையில்தான் வடிவேலு காமெடி நடிகர். நிஜத்தில் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும், உடன் நடிக்கும் சக காமெடி நடிகர்களுக்கும் நெஞ்சுவலியை ஏற்படுத்த கூடிய சீரியஸான வில்லன். அவருக்கு பிடிக்கவில்லை எனில் எல்லாவற்றையும் மாற்றிவிடுவார். தன்னால்தான் படம் ஓடுகிறது என்கிற மமதையில் ஓவராக ஆட்டம் போட்டார். நிஜத்தில் வடிவேலு எப்படி என்பதை அவருடன் நடித்த பல காமெடி நடிகர்கள் கொடுத்த பேட்டிகைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தயாரிப்பாளர்கள் இவரை ஒதுக்கிய பின் சில வருடங்கள் பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்தார். அதன்பின் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். அப்படி வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை. காமெடி நடிகராக அவரை ஏற்றுக்கொண்ட ரசிகர்கள் ஹீரோவாக அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது அவரின் மாமன்னன் படத்தில் நடித்து பாராட்டுக்களை வாங்கியுள்ளார். இந்த தகவல்கள் அனைத்தும் சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஒரு ஊடகத்தில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.