ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜவான்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துணை நடிகராக தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கியவர் விஜய் சேதுபதி. 2010ஆம் ஆண்டு வெளியான ‘தென்மேற்குப் பருவக்காற்று’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக உருவெடுத்த அவர் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என தொடர்ச்சியான வெற்றிப்படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார். 2012ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான ‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தில் முதன்முதலாக வில்லனாக நடித்தார் விஜய் சேதுபதி. இவரின் அசத்தலான வில்லத்தனம் சிறந்த வில்லனுக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது. விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர், விக்ரம் என இவர் வில்லனாக நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மெகா ஹிட் படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜவான்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியின் பிஆர்ஓ யுவராஜ் இந்த அதிகாரப்பூர்வத் தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். புஷ்பா திரைப்படத்தின் அடுத்த பாகத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்று பரவலாக பேசப்பட்டு வந்ததற்கு பதிலளிக்கும் விதமாக வேறு எந்த தெலுங்கு திரைப்படத்திலும் அவர் வில்லனாக நடிக்கவில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.