சின்னத்திரையில் மிகவும் பேமஸ் ஆன ரியாலிட்டி ஷோக்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் ஒன்று. பொதுவாக சமையல் நிகழ்ச்சி என்றாலே சீரியஸ் ஆன ஒன்றாக இருக்கும். ஆனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதற்கு அப்படியே உல்டாவாக இருக்கும். இந்நிகழ்ச்சியில் கோமாளிகளுடன் சேர்ந்து குக்குகள் செய்யும் காமெடி அலப்பறைகள் தான் ஹைலைட். இதுவரை குக் வித் கோமாளில் நிகழ்ச்சி 3 சீசன்கள் முடிவடைந்து உள்ளன.
தற்போது குக் வித் கோமாளில் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வைல்டு கார்டு எண்ட்ரியும் வந்தது. அந்த வகையில், நாகேஷின் பேரன் கஜேஷ் மற்றும் சினிமாவில் கலை இயக்குனராகவும், நடிகராகவும் கலக்கி வரும் கிரண் ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளராக பங்கேற்றனர்.
இதில் நாகேஷின் பேரன் கஜேஷ், தான் பங்கேற்ற முதல் வாரத்தில் அட்வாண்டேஜ் டாஸ்க்கெல்லாம் ஜெயித்து அசத்தியிருந்தார். ஆனால், அடுத்த வாரமே அவர் எலிமினேட் ஆகி வெளியேறினார். இப்படி திடீர் ட்விஸ்ட்கள் நிறைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், சிம்பு, ஆர்.ஜே.பாலாஜி, ஆர்யா என ஏராளமான சினிமா பிரபலங்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு இருக்கின்றனர். ஆனால், தற்போது முதன்முறையாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் இருவர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுள்ளனர்.
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய வருண் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவர் தான் குக் வித் கோமாளியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உள்ளனர். இவர்கள் கலந்துகொண்ட எபிசோடு அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது.