கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த பெயிண்டர் வசமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் தேவாஸ் (40). இவர் நெத்திமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பக்கத்து வீட்டிலிருந்த கல்லூரி மாணவி ஒருவர் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட பெயிண்டர் தேவாஸ், கல்லூரி மாணவியை பின் தொடர்ந்து சென்றுள்ளான். பின்னர், தான் வைத்திருந்த செல்போனில் மாணவி நிர்வாணமாக குளிப்பதை வீடியோ பதிவு செய்துள்ளான்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி, கத்தி கூச்சலிடவே மாணவியின் தந்தை பெயிண்டரை பிடித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடனே அங்கு பிடித்து வைக்கப்பட்டிருந்த பெயிண்டர் தேவாஸ்-ஐ கைது செய்தனர். அத்துடன் அந்த பெயிண்டர் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.