சென்னையில் குடும்பப் பிரச்சனையால் தவித்து வந்த இளம்பெண்ணின் நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புழல் அருகே உள்ள சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், தனது கணவர் மகேஷ் கண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். கணவர் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், அவர் மீது பட்டாபிராம் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகாரும் அளித்திருந்தார். இந்த சூழலில், கடந்த 10-ஆம் தேதி அந்தப் பெண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், தான் மகேஷ் கண்ணாவின் வழக்கறிஞர் என்றும், குடும்பப் பிரச்சனையைப் பேசித் தீர்த்து வைக்கலாம் எனவும் கூறி பெரம்பூரில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துள்ளார்.
வாழ்க்கை மீண்டும் சீராகும் என்ற நம்பிக்கையில் அங்கு சென்ற அந்தப் பெண்ணிடம், அந்த நபர் ஆபாசமாக பேசியதுடன், பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் துணிச்சலாக கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் அந்த நபரைப் பிடித்துச் செம்பியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் வியாசர்பாடியைச் சேர்ந்த ஞானப்பிரகாஷ் (68) என்பதும், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் டபேதாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் அம்பலமானது. ஒரு பெண்ணின் குடும்பச் சிக்கலை தனது காம இச்சைக்கு பயன்படுத்த முயன்ற அந்த முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



