சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை எதிரொலியாக அமைச்சர்களுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக வட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேடை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனால், அந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்றும் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. இதனால் திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர். திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க உள்ளனர். இந்நிலையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள், திமுக நிர்வாகிகள் ஆகியோர் திருவாரூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தொடர் மழை எதிரொலியால் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னையைச் சேர்ந்த அமைச்சர்கள் சேகர்பாபு, மா சுப்பிரமணியன் உள்ளிட்டோரை சென்னையிலேயே இருந்து பணிகளை கண்காணிக்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நேற்றே திருவாரூர் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அமைச்சர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.