லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் அஜித்தின் வசனத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது வைரலாகி வருகிறது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சூப்பர் ஸ்டாரின் 171 வது படமான இந்த படம், சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது வரை மோனிகா , கூலி பவர்ஹவுஸ் , சிகிட்டு ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. குறிப்பாக அண்மையில் வெளியான கூலி பவர்ஹவுஸ் பாடல் ஜெயிலர் படத்தின் ஹுகும் பாடலுக்கு நிகராக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுமட்டுமல்லாமல், தமிழ், மலையாளம் , கன்னடம் , தெலுங்கு என அனைத்து திரைத்துறையைச் சேர்ந்த ஸ்டார் நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். நாகர்ஜூனா , சத்யராஜ் , உபேந்திரா , செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்தி நடிகர் ஆமிர் கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். கூலி படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள். அதீத வன்முறை காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றிருப்பதால் சென்சார் வாரியம் இப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கியுள்ளது.
. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இந்த ஆண்டு மார்ச் மாதம் படப்பிடிப்பு நிறைவுக்கு வந்தது. வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி கூலி திரைப்படம் உலகளவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று கூலி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,
“நான் முதன்முதலில் லோகேஷிடம் கதை சொல்லுங்கள் என்று சொன்னபோது நான் ஒரு கமல் ஃபேன் என்றார். யாருடைய ரசிகர் என்று நான் கேட்டேனா? இந்த படத்தில் பன்ச் டயலாக் எல்லாம் இல்லை என அவர் மறைமுகமாக என்னிடம் சொல்கிறார்.
இது முழுக்க முழுக்க ஒரு வில்லன் கதாபாத்திரம் என்று என்னிடம் அவர் சொன்னார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் ஒரு மாதம் கழித்து மீண்டும் வந்து அந்த கதைக்கு நிறைய நடிகர்கள் தேவைப்படுகிறார்கள் என்றார். என்னவோ இந்த கதையில் குறைவான நடிகர்கள் இருப்பது போல. முதலில் இந்த படத்துக்கு ‘தேவா’ என்று பெயர் வைத்தோம்.
இந்த படத்தில் சத்யராஜ் நடிப்பதாக லோகேஷ் என்னிடம் கூறியபோது முதலில் சத்யராஜ் நடிக்கிறாரா என்று கேளுங்கள் என்று சொன்னேன். ‘சிவாஜி’ படத்தில் நான் வாங்கும் சம்பளம் அளவுக்கு அவருக்கும் கொடுக்கிறோம் என்று சொன்னோம். ஆனால் அப்போதும் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார். சத்யராஜுக்கும் எனக்கும் கருத்து ரீதியாக வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவர் மனதில் பட்டதை பேசக்கூடியவர். மனதில் பட்டதை பேசுபவர்களை நம்பிவிடலாம். ஆனால் உள்ளேயே வைத்திருப்பவர்களை நம்பமுடியாது.
தொடர்ந்து பேசிய அவர், ‘மங்காத்தா’ படத்தில் அஜித்துக்கு வெங்கட் பிரபு ஒரு வசனம் எழுதியிருப்பார். ‘நானும் எவ்ளோ நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது’ என்கிற வசனத்தை மேடையில் ரஜினி கூறியதும் அரங்கமே அதிர்ந்தது. இதுபோல ஒரு கேரக்டரில்தான் நாகர்ஜுனா நடித்திருக்கிறார்’ என்று பேசியுள்ளார். இவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது,
Readmore: பெரும் சோகம்…! பிரபல காமெடி நடிகர் புற்றுநோயால் உயிரிழப்பு…! திரையுலகினர் அஞ்சலி…!