சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த வைரஸ் உலக நாடுகளையே புரட்டிப் போட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடப்பட்டன. இதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. அதன்பின், கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், தெற்கு ஆசியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, முகக்கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மே 28ஆம் தேதி வரை 1,009 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
கேரளா (430), மகாராஷ்டிரா (209), டெல்லி (104) ஆகியவை அதிக பாதிப்புகளை சந்தித்து உள்ளன. தற்போது தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இருப்பினும், லேசான அறிகுறிகளே இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. சீனாவில் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதத்தில் தொற்று விகிதம் 6.3% என்ற அளவில் இருந்து 15.8% ஆக அதிகரித்துள்ளது. 1.68 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 9 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. உலகளவில் மே 11ஆம் தேதி வரையிலான 28 நாட்களில் 91,583 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட விஷயங்களை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.