இந்தியாவில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ், தற்போது மீண்டும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் சற்று அதிகமாகவே இருக்கிறது.
இதற்கிடையே, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று மெல்ல பரவ ஆரம்பித்துள்ளது. தொடக்கத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்த நிலையில், தற்போது இரட்டை இலக்கத்தை கடந்துள்ளது. கொரோனா வைரஸால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் சித்தராமையாவுடன், சுகாதார அமைச்சர் சரண் பிரகாஷ் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “நாள்தோறும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனவும், கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில், மக்களும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல உள்ள நிலையில், அவர்களுக்கு சளி, காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் இருந்தால், பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். இதுகுறித்து பள்ளி நிர்வாகமும் விழிப்புடன் இருக்க வேண்டும். கொரோனா பரிசோதனைகளுக்கான அனைத்து வசதிகளும் தயார்நிலையில் வைத்திருக்க மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.